நீட் எனும் பரீட்சையானது
High degree of UNCERTAINTY ஐ
இளம் சிந்தனைக்குள் விதைக்கின்றது
UNCERTAINTY என்பது நிலையில்லாமை
எனும் பொருள்படும்
இதில் பனிரெண்டாம் வகுப்பு பொதுப்பரீட்சை என்பது தான் படித்த சிலபஸில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும்
சிறப்பான முன்முயற்சி செய்திருந்தால்
பயிற்சி எடுத்திருந்தால்
படித்ததை தேர்வில் சிறப்பான எழுத முடிந்தால் வெற்றி பெறுவது என்பது சாத்தியமானது.
அதில் போட்டி இருக்கும்.
காரணம் மருத்துவ சீட்டுகள் குறைவு .
போட்டி அதிகம்.
HIGH DEMAND causes "HIGH COMPETITION"
ஆனால்
நீட் பரீட்சையில் நடப்பது என்னவென்றால்
நாம் என்னதான் படித்தாலும்
நாம் படித்த விசயத்தில் இருந்து மட்டும் தான் கேள்விகள் கேட்கப்படும் என்ற நிலை இல்லை
உதாரணம்
டென்னிஸ் விளையாட்டு என்பது சிலபஸ் என்று அறிவிக்கப்பட்டால்
நமது பிள்ளைகள் டென்னிஸ் மைதானத்தின் நீள அகலம் / க்ராண்ட் ஸ்லாம் ஜெயித்தவர்கள் / டென்னிஸ் விளையாட்டின் விதிமுறைகள் போன்றவற்றை படிப்பார்கள்
ஆனால் கேள்வியில்
டென்னிஸ் மைதானத்தில் இருக்கும் நெட்டில் எத்தனை ஓட்டைகள் இருக்கலாம் என்று கூட கேள்விகள் வரலாம்.
கேட்டால்
இதுவும் டென்னிஸ் பற்றிய சிலபஸ் தான் என்பார்கள்.
இந்த விநோதமான கேள்விகளுக்கு விடைகளை கோச்சிங் செண்டர்களில் பயிற்றுவிப்பார்கள்
ஆனால் அதை நியாபகம் வைத்துக்கொள்வது எல்லோராலும் முடியாது.
மேலும்
நீட் தரும் அடுத்த அழுத்தம்
ஒரு வருடம் பனிரெண்டாம் வகுப்பை முடித்தவுடன் தன்னுடன் படித்த தோழர் தோழிகள் வேறு படிப்புகளில் சென்று சேர்ந்து
விடுவார்கள் ஆனால் மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒரே காரணத்திற்காக கட்டாயம் ஒரு வருடத்தை தியாகம் செய்து கோச்சிங் கிளாசில் சேர்ந்து படிக்க வேண்டும்.
முன்பு பனிரெண்டாம் வகுப்பில் சிறப்பாக தேர்ச்சி பெற்றாலே கஷ்டப்பட்டால் கிடைத்துவிடும் வாய்ப்பில் இருந்து மருத்துவ கல்வி இப்போது எட்டாத தூரத்தில் ஒருவருடம் தியாகம் செய்தால் கூட கிடைப்பது அரிது என்ற நிலைக்கு மாறிவிட்டதை அந்த இளம் மூளைகளால் ஏற்றுக்கொள்ள இயலாமல் போகிறது.
இன்னும்
கிராமப்புற மக்கள்
கோச்சிங் கிளாஸ்களை எண்ணிப்பார்க்க இயலாத ஏழைகள் / மிடில் கிளாஸ் மக்கள்
என்று ஒருசாரார் இந்த போட்டிக்குள்ளேயே வர இயலாமல் இருக்கிறார்கள்
இன்னும் கிராமப்புறங்களில் மிடில் கிளாஸ் லோயர் மிடில் கிளாஸ் வகுப்புகளைச் சேர்ந்த பல அறிவுமிக்க பெண் பிள்ளைகள் இந்நப்போட்டிக்குள்ளேயே வரவியலாமல் பின்வாங்கிவிடுகிறார்கள்
இது கிராமப்புற பெண்கள் நல மருத்துவத்திலும் மகப்பேறு மருத்துவத்திலும் எத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை காலம் நின்று பதில் சொல்லும்.
கோச்சிங் முறையாக பெற்றவர்களுக்கே ஒரு வருடத்தில் நீட் பரீட்சை ஜெயிப்பது கடினம் என்றால்
கோச்சிங் பெற இயலாதவர்களின் நிலை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை
இது சமுதாயம் தரும் அழுத்தம் ஆகும்
Societal Pressure
அடுத்தபடியாக
சொந்தங்கள்/ வீட்டில் இருக்கும் உறுப்பினர்கள் தங்களை அறியாமலேயே தரும் மன அழுத்தம்
அது எப்படி இருக்கும் தெரியுமா?
"நீ டாக்டருக்கு படிக்கிறேன்னு சொன்னதால..நகைய வித்து கோச்சிங் கிளாஸ் சேத்து விட்ருக்கேன். படிச்சு எப்டியாவது டாக்டர் ஆகிரணும்டி "
உங்க பொன்னு என்ன பண்றா? என்று கேட்பவர்கள் இடத்தில்
"டாக்டர் சீட்டுக்காக படிச்சுட்ருக்கா..
நல்லா படிக்கிறா..எப்டியும் இந்த வருசம் சீட் போட்றுவா.."
என்று நீங்கள் கூறுவது கூட அந்த மாணவ மாணவிகள் தலையில்
சுமக்க இயலாத பெரும்பாரத்தை ஏற்றும்
காரணம் உங்களுக்கு தெரியாது..
நீட் பரீட்சைக்கு பின்னால் இருக்கும் High degree of uncertainty படிக்கும் அவளுக்கு மட்டுமே தெரியும்.
இது Family pressure
அதற்கடுத்து தன்னுடன் பயின்ற தோழர் தோழிகளில் யாரேனும் ஒருவரோ இருவரோ சீட் போட்டுவிட்டு அவருக்கு கிடைக்காவிட்டால் Peer pressure சேர்ந்து கொள்ளும்
இத்தனையும் கடந்து
அந்த இளம் மனங்கள் வெற்றி பெறத் தேவையான ஊக்கம் என்பது
மிகக்குறைவாகவே கிடைக்கும்
இதன் விளைவாகவே அதிக நீட் தொடர்பான தற்கொலைகள் நடக்கின்றன என்பதை உணர முடிகிறது
நீட் என்பது இயற்கையிலேயே ஏற்றத்தாழ்வுடன் பாரபட்ச போக்கும் ஈவுஇரக்கம் சிறிதுமற்ற ஒரு பரீட்சையாக வடிவமைக்கப்பட்டுள்ளதால்
அதனினின்றும் இது போன்ற விளைவுகள் தோன்றுகின்றன
ஏற்றத்தாழ்வுகள் இன்றி பொருளாதார பிறப்பிட வாழும் சூழல் பேதமின்றி
அனைவருக்கும் சரிசமமான வாய்ப்பு வழங்கும் ஒரு தேர்வு முறையே இதற்கான தீர்வாக இருக்க முடியும்
நீட் சமூக நீதியை கொன்று புதைத்து அதில் தரமான மருத்துவர்களை விதைக்கப்பார்க்கிறது
சமூக நீதி இல்லாமல் நாம் என்ன கனவு கண்டாலும் அது வெத்துக்கனாவாகவே முடியும்.
நீட் உருவாக்கும் தரமான மருத்துவர்கள் யாவரும் நகரங்களில் இருந்தும்
பொருளாதாரத்தில் மேம்பட்ட தளத்தில் இருந்துமே பெரும்பான்மை வருவார்கள்.
அவர்களுக்கு கிராமங்களின் நிலையோ
ஏழைகளின் வலியோ
ஒடுக்கப்பட்டவர்களின் நிலையோ இயற்கையிலே தெரியாது.
இது அவர்கள் மீது பிழையன்று
இது நீட் என்ற இந்த அநீதியின் பிழையாகும்
தற்கொலைகள் கட்டாயம் பூஜிக்கப்படக்கூடாது.
ஆனால் தற்கொலைகளுக்கு சமூகம் காரணமாக இருந்தால் அதை சரிசெய்து கொள்ள சமூகம் தான் முன்வர வேண்டும்
நீட்டுக்காக தயாராகும் மாணவ மாணவிகளிடம் பெற்றோர்கள் கூற வேண்டியது இதைத்தான்
"உங்களால் முடிந்த அளவு முயற்சி செய்யுங்கள். எதற்கும் கவலைப்படாதீர்கள்.
கொண்ட கனா சாகலாம். ஆனால் உயிர் அதனினும் பெரியது. வெற்றி தோல்வி இரண்டிலும் நாங்கள் உடன் இருப்போம்.
எனவே உங்கள் முழு முயற்சியை கொடுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வேண்டாம்" என்று கூறுங்கள்
Post a Comment
Post a Comment