நறுமண சிகைக்காயை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

 Fragrant hair


சிகைக்காய் பயன்படுத்துவதால் கேசம் வளர்கிறதோ இல்லையோ... வளர்ந்த கேசம் உதிராமல் இருப்பதற்கு நிச்சயம் உத்தரவாதமுண்டு. வீட்டிலேயே நறுமணசிகைக்காய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

சிகைக்காய் பயன்படுத்துவதால் கேசம் வளர்கிறதோ இல்லையோ... வளர்ந்த கேசம் உதிராமல் இருப்பதற்கு நிச்சயம் உத்தரவாதமுண்டு. வீட்டிலேயே நறுமணசிகைக்காய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

நறுமண சிகைக்காய் தயாரிக்கத் தேவையான பொருட்கள்....


  • சிகைக்காய் - அரை கிலோ
  • பூந்திக்கொட்டை - விதை நீக்கியது 30
  • சுருள் பட்டை - 2 சுருள்
  • சுக்கு - 2 சிறு துண்டு (உடல் சூட்டைக் குறைக்க)
  • பார்லி - 2 டேபிள் ஸ்பூன் (  இதில் செலினியம், அயர்ன்,காப்பர் இருப்பதால் கேசத்தைச் சுத்தம் செய்ய உதவும்)
  • ஆளி விதை - 2 டேபிள் ஸ்பூன் (நேச்சுரல் கண்டீசனராகச் செயல்பட்டு முடிக்கு பளபளப்பைத் தரும்)
  • கொத்தமல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன்
  • நெல்லிக்காய்கள் - 10 (விதை நீக்கி நன்கு காய வைத்த மலை நெல்லிக்காய்கள் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்)
  • மிளகு - 1 டீஸ்பூன் ( கூந்தலின் வேர்ப்பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும், முடியில் பூஞ்சைத் தாக்குதல் அல்லது பொடுகு நீக்கியாகவும் இது உதவும்.)
  • நன்னாரி வேர் - 12 சிறு துண்டு (உடலைக் குளிர்விப்பதுடன் சிறந்த நறுமணத்தையும் தரக்கூடியது.
  • சீரகம் - 1 டீ ஸ்பூன்
  • பாதாம் பருப்பு - 15 (பாதாமில் இருக்கும் புரதம் கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களைத் தருவதோடு வேர்ப்பகுதி வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கவும் உதவும்)
  • வெந்தயம் - 6 டேபிள் ஸ்பூன் ( சிகைக்காயில் நுரை வருவதற்கும் உச்சந்தலையில் சூட்டைத் தணிக்கவும் உதவும்)
  • கடலைப் பருப்பு - 6 டேபிள் ஸ்பூன் (கூந்தலிலுள்ள அழுக்கைப் போக்கி கூந்தல் மென்மையாக உதவும்)
  • பச்சரிசி - 6 டேபிள் ஸ்பூன் (சிகைக்காயை வடிகஞ்சியில் கலந்து கூந்தலில் தடவுவதற்குப் பதிலாக நேரடியாக பச்சரிசியும் சேர்க்கலாம்.. இது கூந்தலை சுத்தப் படுத்துவதோடு பளபளப்பையும் தரும்)
  • உளுந்து - 6 டேபிள் ஸ்பூன்
பொதுவாக சிகைக்காய் பொடி தயாரிப்பில் பயன்படுத்தக்கூடிய மூலப்பொருட்கள் அனைத்துமே உடலுக்குக் குளிர்ச்சி அளித்து உடல் சூட்டைக் குறைக்கக் கூடியவையாகவே இருக்கும்.
 ஆனால், அது சைனஸ் பிரச்னை இருக்கக் கூடிய சிலருக்கு ஒத்து வராது. அப்படியான நேரங்களில் நாம் சிகைக்காய் பொடிக்கான அடிப்படைப் பொருட்களுடன் குளிர்ச்சியை சமப்படுத்தக்கூடிய வகையிலான சில பொருட்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை....

  மேலே சொல்லப்பட்ட அளவு பொருட்களை எடுத்துக்கொண்டால் அரை கிலோவுக்கும் அதிகமான நறுமண சிகைக்காய்த் தூள் கிடைக்கும். இவற்றை நன்கு காய வைத்து மெஷினில் கொடுத்து அரைத்து வாங்க வேண்டும்.

வீட்டில் மிக்ஸியில் அரைப்பது வேலைக்கு ஆகாது. அதோடு சிகைக்காய் அரைத்து வாங்கியதும் அதில் திரிபலா சூரணம் மூன்று டீஸ்பூன் சேர்த்துக் கொண்டால் வாதம், பித்தம், கபத்தினால் உண்டாகக் கூடிய தொல்லைகளையும் தவிர்க்கலாம். 

திரிபலா சூரணம் என்பது கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காயின் கலவையே! திரிபலாவை அடுத்து சிகைக்காய்த்தூளோடு அதிமதுரப் பொடியும் 1 டீஸ்பூன் சேர்த்தால் நேச்சுரல் ஹெர்பல் ஷாம்பூவான நறுமண சிகைக்காய்த்தூள் பயன்படுத்தத் தயாராகி விட்டது என்று அர்த்தம்.

அவரவர் கூந்தலின் நீளத்துக்கு ஏற்ப 1 ஸ்பூனோ, 2 ஸ்பூன்களோ நறுமண சிகைக்காய் எடுத்துக் கொண்டு அதை வெது வெதுப்பான வெந்நீரில் கரைத்து தலையில் கூந்தலின் வேர்க்கால்கள் முதல் நுனி வரை படும் படி நன்கு தேய்க்கவும். 

சுமார் 20 நிமிடங்கள் அப்படியே காய விட்டு சிகைக்காயில் சேர்க்கப்பட்டுள்ள மூலிகைகள் மற்றும் வாசனைப்பொருட்களின் சத்துக்கள் எல்லாம் கூந்தலில் இறங்கும் வண்ணம் செய்யவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கூந்தலை நன்கு அலசி எடுக்கவும். அவ்வளவு தான் வேறு எதுவும் செய்யத் தேவை இல்லை.

Post a Comment

0 Comments