கொரோ னோ வை எதிர்த்து போராடி வென்ற பெண் ! 48 நாட்களுக்குப் பிறகு நெ கட்டிவ் ரிசல்ட் வந்து டிஸ் சார்ஜ் ஆன கதை !

என்னதான் கொரோனோ வந்து மிரட்டினாலும், அசராது அதற்கு எதிராக போராடும் மாநிலமாக உள்ளது கேரளா. நாடெங்கும் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியில் வந்து போவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதை வாய்ப்பாக பயன்படுத்தி லட்சக்கணக்கோர் இன்னும் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இதனால் அது பரவி வரும் வேகம் குறைந்துள்ளதே தவிர, பரவலை முழுவதுமாக தடுக்க முடியாமல் தத்தளித்து வருகிறது. இந்நிலையில் முழுவதும் படிப்பறிவு கொண்ட மாநிலமான கேரளா கொரோனோ தொற்றுக்கு எதிராக கடுமையாக போராடி வென்று வந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் 23 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரசுக்கு இதுவரை 724 பேர் பலியாகியுள்ளனர்.

ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து நாடு முழுவதும் இதுவரை 4 ஆயிரத்து 813 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

இதற்கிடையில், கடந்த 48 நாட்களில் 20 முறை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்த பெண்ணுக்கு கடந்த இரண்டு பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ள சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ராணி என்ற கிராமத்தை சேர்ந்த ஷெர்லி அப்ரகாம் (62) என்ற பெண் கொரோனா அறிகுறியுடன் கடந்த மார்ச் 8-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஷெர்லியின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவர் கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பொதுவாக கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் 15 முதல் 20 நாட்களில் வைரசில் இருந்து முழுமையாக குணமடைவது வழக்கம். ஆனால், ஷெர்லியின் விவகாரம் சற்று வித்தியாசமானது.


மார்ச் 8-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அவருக்கு இத்தனை நாட்களில் சிகிச்சையின் போது மொத்தம் 20 முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ஒவ்வொரு முறை பரிசோதனை செய்யும் போதும் கொரோனா பாசிட்டிவ் என்றே முடிவுகள் வந்தது. அதாவது 20 முறை நடத்தப்பட்ட சோதனையிலும் கொரோனா பாசிட்டிவ் என்றே முடிவு வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் ஷெர்லிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மாற்றம் கொண்டு வந்தனர்.

இதையடுத்து, 20 முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் என வந்த ஷெர்லி அப்ரகாமிற்கு கடந்த இரண்டு முறை (21, 22-வது முறைகள்) நடத்தபட்ட பரிசோதனை முடிவுகள் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதால் மருத்துவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

21-வது முறை நடத்தபட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என முடிவுகள் வந்தது. ஆனாலும், மருத்துவர்கள் ஷெர்லிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (நேற்று) நடத்தப்பட்ட 22-வது பரிசோதனையிலும் ஷெர்லிக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது.

இதனால் மகிழ்ச்சியடைந்த மருத்துவர்கள் ஷெர்லியை கொரோனா வார்டில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து 14 நாட்கள் தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளனர். 

20 முறை கொரோனா பாசிட்டிவ் என வந்த பெண் 48 நாட்கள் கேரள மருத்துவ ஊழியர்கள் மேற்கொண்ட தொடர் சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் மூலம் கொரனோ குறித்த அச்சம் குறைய தொடங்கியுள்ளது. இனி வரும் காலங்களில் கொரானா நோய் மக்களை அதிகம் பாதிக்காதவாறு பாதுகாப்பதோடு மட்டமன்றி, வந்த பிறகும் கூட உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments