காய்ச்சல் ஒரு நோயா? டாக்டர் விளக்கம் !

kaichal arikurigal

உடம்பு நெருப்பாய் கொதிக்கிறது.நாக்கு கசந்து எதுவும் சாப்பிடப்பிடிக்க வில்லை. அலுப்பு , அமைதியின்மை, உடல் வலி , உடல் பாரம், அடித்து போட்டது போல் உடம்பு துவண்டு விடும். இது தான் காய்ச்சலின் அடையாளம். ஒரு சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை 98.6°F (37°C).இது ஆளாளுக்கு,நேரத்திற்கு நேரம் சிறிது மாறுபடலாம். 

ஆனால் இது 100.5°F அல்லது அதற்கு மேலே போகும்போது அதைக் காய்ச்சல் , ஜுரம் என்கிறோம்.இதனை அனுபவப்படாதவர்களே இல்லை என்னுமளவு சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது.

காய்ச்சல் ஒரு நோயா?


காய்ச்சல் ஒரு நோயல்ல, நமக்கு எதிரானதும் அல்ல . மாறாக நோய்க்கிருமிகளை ஒழிப்பதற்காக நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி போராடுவதன் பாகம் தான் காய்ச்சல். நோயுண்டாக்கும் அனேக பாக்டீரியாக்களும் வைரசுகளும் சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால் உடல் வெப்ப நிலை சிறிது அதிகமாகும்போது இந்த கிருமிகள் பெருகுவது மிகவும் கட்டுப் படுத்தப்படுகிறது. 
அதிக வெப்பநிலை வைரசுகளுக்கு ஆகாது. அது மட்டுமல்ல காய்ச்சல் நோயெதிர்ப்புத் திறனையும் அதிகப்படுத்தி அதிக வெள்ளையணுக்களையும், antibody-களையும் உருவாக்குகிறது.

காய்ச்சல் மூளையை பாதிக்குமா?


காய்ச்சல் காரணம் குழந்தைகளின் மூளை பாதிப்படையும் என அனேக பெற்றோர்கள் வீண் பயம் கொள்கின்றனர். சாதாரண காய்ச்சல்களுக்கு அவ்வாறு பயப்படத் தேவையில்லை. காய்ச்சல் 107.6°F (42°C) க்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே அத்தகைய நிலை ஏற்படக்கூடும்.


மருத்துவம் செய்யாவிட்டால் காய்ச்சல் அதிகரித்துக்கொண்டே போகுமா?

அப்படியில்லை. வைரஸ் தொற்றால் உண்டாகும் காய்ச்சல்கள் சாதாரணமாக 105°F க்கு மேல் அதிகமாவதில்லை. குழந்தைக்கு கனமான உடை,போர்வை போர்த்தியிருந்தாலோ, அதிக வெப்பமான சூழலில் இருந்தாலோ மட்டுமே உடல் வெப்பம் அதற்கு மேலே அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

காய்ச்சலால் குழந்தைக்கு ஜன்னி கண்டு விடும் என்று சில பெற்றோர்கள் அனாவசியமாக பயப்படுவார்கள். இது தேவையற்ற பயம். அபூர்வமாகவே அப்படி நிகழும். திடீரென்று உடல் வெப்பம் மிக அதிகமாகப் போனால் அத்தகைய நிலை உண்டாகலாம். எனவே அப்போது உடனே வெப்பத்தை குறைக்க முயல வேண்டும்.

காய்ச்சல் பெரும்பாலும் நோய்க்கிருமிகளால் தான் வருகிறது என்றாலும் விஷம், கேன்சர் , மற்றும் சில காரணங்களாலும் வரும்.


வெப்ப அதிர்ச்சி


அதிக வெப்பத் தாக்குதல்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும். கத்திரி வெயில் தாகுதல்கள். நெருப்பினால் உண்டாகும் வெப்பமான சூழல்களில் மாட்டிக் கொள்ளுதல் ஆபத்தானவ. இத்தகைய நிலைகளில் உடல் தன் வெப்பத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது போவதால் மரணத்தை ஏற்படுத்தி விடும். இன்னிலையில் பாதிக்கப்பட்டவரை உடனே அந்த சூழலில் இருந்து இடம் மாற்றவும். குளிர்ந்த நீரில் நனைத்த துணியை கொண்டு உடல் முழுதும் துடைத்து விடவும். ஐஸ் கட்டிகளை அக்குள் மற்றும் கழுத்து பகுதிகளில் வைத்து வெப்பத்தை உடனடியாகக் குறைக்கவும். திரவ ஆகாரங்களைக் குடிக்கக் கொடுத்து நினைவிழக்காமல் பார்த்துக் கொள்ளவும். உடனடி மருத்துவரை பார்க்கவும்.

காய்ச்சலுக்கு என்ன சிகிட்சை செய்யலாம்?


காய்ச்சல் சாதாரணமாக இருந்து வேறு ஒரு பிரச்சினையும் இல்லாதிருந்தால் எந்த வித சிகிட்சையும் தேவையில்லை. காய்ச்சலுக்கு தனியாக மருந்து எதுவும் இல்லை என்பதே உண்மை. சிகிட்சை என்பது உங்கள் உபாதையை குறைப்பது, வைரசுகளை எதிர்த்து போராட உடலுக்கு துணை செய்வது மட்டும் தான்.நிறைய நீராகாரமும் ஓய்வும் இருந்தாலே போதும் தானாகவே குணமாகிவிடும்.

குழந்தை மிகவும் பலவீனமாகி வாந்தி, நீரிழப்பு எற்பட்டு தூங்க முடியாமல் துன்பப்பட்டால் மட்டுமே காய்ச்சலை சிறிது குறைக்க முயற்சிக்கலாம். ஆனால் காய்ச்சலை முற்றிலும் இல்லாத அளவு குறைத்து விடக்கூடாது


  • காய்ச்சலை குறைக்க முயலும் போது காய்ச்சலால் குளிர் ஏற்பட்டவரை கனத்த போர்வையால் மூடக்கூடாது.
  • வெப்பமில்லாத காற்றோட்டமான அறைகளில் கிடத்தவும். மெல்லிய ஆடைகளை அணியலாம்.தேவைப்பட்டால் மெல்லிய போர்வை உபயோகிக்கலாம்
  • இளஞ்சூடான நீரில் குளிக்கலாம் அல்லது நனைந்த துணியால் உடம்பைத் துடைத்து எடுக்கலாம்.காய்ச்சல் தணிய மருந்து எடுத்துக் கொண்ட பிறகு தான் இதை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் இவவாறு குறையும் வெப்பம் பிறகு மீண்டும் கூடிவிடும்
  • பச்சைத் தண்ணீரில் குளிக்கக் கூடாது.இது உடலை அதிகம் குளிர வைத்து நடுக்கத்தை ஏற்படுத்தி விடும்.இது நிலமையை மோசமாக்கி உடல் வெப்பத்தை அதிகரித்து விடும்.
  • முடிந்த அளவு, குளிர்ந்த திரவ ஆகாரங்கள் குடிக்க கொடுக்கவும். இது காய்ச்சலால் உண்டாகும் நீரிழப்பை ஈடு செய்யும். சளி கெட்டியாகாமல் வெளியேற உதவும்

என்ன மருந்துகள் எடுக்கலாம்?


  • Acetaminophen மற்றும் ibuprofen குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சல் குறைய உதவுகிறது.
  • 4 muthal 5 மணிக்கொருமுறை acetaminophen எடுத்துகொள்ளலாம். 6 முதல் 8 மணிக்கொருமுறை ibuprofen எடுத்துகொள்ளலாம். கைகுழந்தகளுக்கு Ibuprofen நல்லதல்ல.
  • பெரியவர்களுக்கு Aspirin நல்லது. ஆனால் குழநதைக்கு கொடுக்காதீர்கள்.
  • காய்ச்சல் மருந்துக்கள் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. சரியான மருந்து விபரங்களை படித்து விட்டு அதன் படி உபயோகிக்கவும்.
  • 3 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவரை காண்பிக்காமல் சுய வைத்தியம் செய்யாதீர்கள்.

டாக்டரை எப்போது பார்க்க வேண்டும்?


  • மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால்.100.2°F (37.9°C) மேல் காய்ச்சல் அதிகரித்தால்.
  • 3 முதல் 6 மாதக் குழந்தைக்கு காய்ச்சல்101°F (38.3°C) அல்லது அதற்கு மேல் அதிகமானால்.
  • 6 முதல் 12 மாதக் குழந்தைக்கு காய்ச்சல் 103°F (39.4°C)கு மேல் அதிகமானால்.
  • இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாளுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால்.
  • சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் காய்ச்சல் 48 முதல் 72 மணி நேரத்திற்கு மேல் நீடித்தால்.
  • 105°F (40.5°C) க்குமேல் காய்ச்சல் இருந்து சிகிட்சை செய்தும் குறையா விட்டால்.
  • எரிச்சல். பிதற்றல், சுவாசிப்பதில் சிரமம். கழுத்து விறைத்தல் ,கை கால் செயலிழப்பு, ஜன்னி ஏற்பட்டால்.
  • தொண்டை கரகரப்பு,காதுவலி,இருமல் இருந்தால்.
  • Acetaminophen போன்ற காய்ச்சல் மாத்திரைகள் பலனளிக்காவிட்டால்.
  • உடனே டாக்டரை பார்க்க வேண்டும்


நோய் நாடி அறிதல்:



  • மருத்துவர் நோயாளியை தோல், கண்கள், காது, மூக்கு, தொண்டை, கழுத்து, நெஞ்சு, வயிறு ஆகிய பகுதிகளை நன்கு ஆராய்ந்து நோய் காரணத்தை அறிவார்.
  • எவ்வளவு நாள் காய்ச்சல் நீடிக்கிறது?
  • காய்ச்சல் அதிகரித்துக்கொண்டிருக்கிறதா? அதுவும் வேகமாகவா?
  • விட்டு விட்டு காய்ச்சலா? காய்ச்சல் வந்து போகும் கால இடைவெளி எவ்வளவு? தினமும் வந்து போகிறதா?
  • காய்ச்சலுக்கு காரணம் எதாவது அலர்ஜியா?
  • காய்ச்சல் ஏறி இறங்குகிறதா?
  • போன்ற கேள்விகளில் காய்ச்சலுக்கான காரணம் தெரிய வரும்.


தேவைப்படும் டெஸ்டுகள்:


  • இரத்த சோதனை
  • சிறு நீர் பரிசோதனை
  • மார்பு பகுதியில் எக்ஸ் ரே சோதனை

காய்ச்சலோடு ஜலதோசம் இருந்தால் அடிக்கடி ஆவி பிடிப்பது நல்லது. நீராவியின் வெப்பம் தொண்டையும் சுவாசக்குழாயிலும் உள்ள வைரசுகளை அழிக்கிறது.

தொண்டை கரகரப்புக்கு 1 கப் தண்ணீரில் அரை தேக்கரண்டி உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது நலம் தரும்.

மருந்துகள் பாதுகாப்பானது அல்ல: 


காய்ச்சல் ஜல தோசத்திற்கு கடைகளில் கிடைக்கும் மாத்திரைகள் அவ்வளவு பாதுகாப்பானது அல்ல. "ஜலதோசம் மருந்து சாப்பிடாவிட்டால் 7 நாளில் குணமாகும். மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் குணமாகிவிடும் "என்று கூறப்படுவது நகைச்சுவைக்காக அல்ல. இம்மாத்திரைகள் பல சமயங்களில் ஒவர் டோசாகவோ, தேவையற்றதாகவோ இருக்கிறது. நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இத்தகைய மாத்திரைகள் கொடுக்ககூடாது என்று FDA கூறுகிறது.

மூக்கடைப்புக்கு பயன்படும் மருந்துகளும் தற்காலிக நிவாரணம் தான் தருகிறது. தொடர்ந்து பயன் படுத்துவது கெடுதி செய்யும்.அவற்றில் அடங்கியுள்ள Pseudoephedrine இரத்த அழுத்தத்தை அதிகரித்து இதய நோயில் கொண்டு விடும்.தொடர்பாக புராஸ்டேட், தைராய்டு, நீரிழிவுக்கு இழுத்து செல்லும். மூக்கடைப்பு மருந்துகளில் காணப்படும் phenylpropanolamine (PPA) பக்க வாதத்திற்கு அடிகோலும் .எனவே இம்மருந்து உங்களிடமிருந்தால் தூக்கி எறிந்து விடவும்.

உறங்குவதிலோ , பேசுவதிலோ இடையூறு இருந்தால் ஒழிய dextromethorphan அடங்கிய இருமல் மருந்துகள் உபயோகிக்க வேண்டாம்.சில இருமல் மருந்துகள் தூக்க கலக்கத்தை ஏற்படுத்தி கை கால்களை தள்ளாடச் செய்து விடும்.அது விபத்துக்களுக்கு ஆளாக்கும்.சிறிய இருமலை வாயை துணி கொண்டு பொத்தி சகித்துக் கொள்வது நல்லது. சுவாசக்குழாயிலிருந்து சளியையும் கிருமிகளையும் வெளியேற்றத்தான் இருமல் உண்டாகிறது. இது நல்லது. இருமல் ஒரு நோயல்ல.

காய்ச்சல் வந்துவிட்டால் என்ன சாப்பிடலாம்?


காய்ச்சல் வந்துவிட்டாலே எதுவும் சாப்பிடக் கூடாது என்று பொதுவான கருத்து உள்ளது. அது மிகவும் தவறானது. ஆனால், காய்ச்சல் நேரத்தில்தான் உடலுக்கு அதிக கலோரிச் சத்து தேவைப்படுகிறது.எனவே ஊட்டச் சத்தான உணவுக்கு, காய்ச்சல் நேரத்திலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம். காய்ச்சல் வந்தால் குடலில் அழற்சி இருக்கும்; நாக்கில் கசப்புணர்வு இருக்கும். நோய்த் தொற்று இருக்கும் நிலையில் குமட்டல், வாந்தி உணர்வும் இருக்கும்.

மிருதுவான, அதே சமயம் காரம் - மசாலா இல்லாத திரவ உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சத்துமாவு கஞ்சி, ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம், வேக வைத்த காய்கறிகளை மசித்துச் சாப்பிடலாம். பழங்கள் சாப்பிடலாம்.பழச்சாறு சாப்பிடலாம். ஏனெனில் காய்ச்சல் இருக்கும் நிலையில் வெப்ப வெளியேற்றம் காரணமாக உடலின் உயிர்ச் சத்துகளில் ஒன்றான நீர்ச் சத்து அளவு குறையும்.எனவே குடிநீர் அதிகம் குடிக்க வேண்டும்.

காய்ச்சல் இருக்கும் நிலையில் பழச்சாறு, இளநீர், மோர் குடிக்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. இவற்றைச் சாப்பிட்டால் காய்ச்சல் அதிகமாகும், ஜலதோஷம் வந்து சேரும் என்ற கவலையும் ஏற்படுகிறது.இது வீண் கவலை. காய்ச்சல் இருந்தாலும் இவற்றைச் சாப்பிடும் நிலையில் உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்து கிடைத்து, காய்ச்சல் குறையும்.

காய்ச்சல் என்பது ஓர் அறிகுறிதான்.நோய்த் தொற்று (viral infection) காரணமாகவே காய்ச்சல் ஏற்படுகிறது. எனவே காய்ச்சல் குறைந்தவுடன், நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தவும் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் புரதச் சத்து அதிகம் தேவை.இந் நிலையில் பால், தயிர், பருப்பு - கீரைகள் - காய்கறிகள் நிறைந்த உணவு ஆகியவற்றை காய்ச்சல் விட்ட பிறகு தொடர்ந்து சாப்பிட வேண்டும். பழங்கள் சாப்பிடுவதும் புரதச் சத்தை உடலுக்கு அளிக்கும்.அசைவம் சாப்பிடுவோர் முட்டை சாப்பிடலாம். அசைவ உணவில் காரம்-மசாலா அதிகம் கூடாது.

நோயெதிர்ப்பு சக்தியூட்டும் உணவுகள்


எந்த ஒரு நோய் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடும் சக்தியை, நம் உடம்பானது தானாகவே உற்பத்தி செய்து கொள்ளும். இது, நோய்களை உருவாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராகச் சண்டைப் போட்டு அவற்றை உடலில் இருந்து வெளியேற்றிவிடும் அல்லது அழித்துவிடும்.

நீங்கள் உட்கொள்ளும் வைட்டமின்கள் (Minerals) மற்றும் கனிமங்களின் (Vitamins) அளவைப் பொறுத்துத்தான் இந்த சக்தி இயங்கும். அதனால் இந்தச் சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டாலே போதும், மருந்தின்றி காய்ச்சலை விரட்டியடிக்கலாம்!

நோயெதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ள சில சத்துக்களையும் உணவுகளையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

சத்துள்ள உணவு அதோடு vitamin A, the vitamin B complex (vitamins B-1, B-2, B-5, B-6, folic acid) , vitamin C, சரியான அளவு எடுத்துக்கொள்வது நோயெதிர்ப்பு neutrophil களை உருவாக்கி நோய்க்கிருமிகளிடமிருந்து உடலைப் பாதுகாக்கும்.
காப்பர் சத்து: நம் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள்தான் தொற்றுநோய்க் கிருமிகளை முழுவேகத்துடன் எதிர்க்கக்கூடியவை.காப்பர் சத்தானது வெள்ளை அணுக்களுக்கு அந்த சக்தியை அளிக்கக்கூடியதாக உள்ளது.

பனிவரகு, சாமை உள்ளிட்ட தினைவகைகள், பீன்ஸ், சன்னா, பட்டாணி, தாமரைத்தண்டு, செல்மீன்கள், சாக்லெட் ஆகியவற்றில் காப்பர் சத்து அதிகம் உள்ளது.

வைட்டமின் E:இளமையிலிருந்தே வைட்டமின் ணி சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டு வருபவர்களுக்கு, வயதானபின்னும் ஃப்ளு காய்ச்சல் போன்ற தொந்தரவு வராது. காரணம், வைட்டமின் E யானது அதிகமாக உடலுக்குள் செல்லச் செல்ல... நோயெதிர்ப்பு உயிரணுக்களின் அளவானது இரண்டு மடங்காக உற்பத்தியாகியிருக்கும்.

இதனால் அவை காய்ச்சலைத் தரும் வைரஸ்களை எளிதில் கொன்றுவிடும்.சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், பட்டாணி, கோதுமை, தானிய வகைகள், காய்கறி எண்ணெய்கள், மீன், மீன் எண்ணெய், முட்டை, கோழி ஆகியவற்றில் வைட்டமின் E அதிகம் .

வைட்டமின் B12: B12ன் தலையீட்டால்தான் காய்ச்சலைத் தரும் கிருமிகள் உடலுக்குள் வரும்போதெல்லாம் நோயெதிர்ப்புச் சக்தியை உற்பத்தி செய்யும் செல்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. 

வெள்ளை ரத்த அணுக்கள் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்ய B12தான் காரணம்.ஈரல், முட்டை, பால் போன்ற அசைவ உணவுகளில் B12 மிக அதிகமாக உள்ளன. பீன்ஸ், ஆரஞ்சு, கீரைவகைகள், பட்டாணி, சூரியகாந்திவிதைகள், முழுதானிய விதைகள் ஆகியவற்றிலும் இச்சத்து போதியளவு உள்ளன.

துத்தம் (ZINC):உங்கள் உடலில் உள்ள நோயெதிர்ப்புச் சக்தியை மேலும் மேலும் வளர்க்க துத்தச்சத்து அவசியமாக உள்ளது. தானிய வகைகள், அனைத்துத் தினைவகைகள், பீப், போர்க் போன்றவற்றில் துத்தச்சத்து அதிகமாக உள்ளன.

தாவர வேதிப்பொருள்:உங்கள் உடலில் உள்ள நோயெதிர்ப்புச் சக்தியை வலுவாக்கி, நோய்க்கிருமிகளை அழித்து நிர்மூலமாக்க தாவர வேதிப் பொருட்கள் அவசியம்தேவை.வெங்காயம், ஆப்பிள் (குறிப்பாக தோல்கள்), கறுப்பு டீ, பூண்டு, மிளகு, பெர்ரி, திராட்சை, தக்காளி ஆகியவற்றில் வேண்டிய மட்டும் தாவர வேதிப் பொருட்கள் உள்ளன. இவை காய்ச்சலை (Flu) உருவாக்கும் கிருமிகளை அண்டவிடுவதில்லை.

சந்தோஷமான சூழல்:குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமாக இருக்கும் சூழலை உருவாக்கிக்கொள்வது என்பது காய்ச்சலை வரவிடாமல் தடுக்கும் ஓர் உத்தியாகும். அன்பான பேச்சு, ஆதரவான நடவடிக்கைகள், சுற்றுலா, இசை.... இவையாவும் மனதை சந்தோஷப்படுத்துவதால், நம் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி நாளுக்கு நாள் கூடுகிறதாம்.

கிருமிகள்- கண்ணுக்கு தெரியாத வில்லன்கள்


நம்மைசுற்றி எல்லா இடங்களிலும் கோடிக்கணக்கான கண்ணுக்குத்தெரியாத நோய்கிருமிகள் நிறைந்திருக்கிறது. நம் நோயெதிர்ப்பு சக்தி வலுவிழக்கும் நேரம் பார்த்து இவை நம்மை தாக்கி நோயாளியாக்கக் காத்திருக்கின்றன. பொதுவாக எங்கெங்கே இந்த கிருமிகள் கூடாரம் போட்டு தங்கக் கூடும் என்று பார்ப்போம். அவற்றை இல்லாது ஒழிப்பதன் மூலம் உடல் நலத்தைக் காப்போம்.

சமையல் அறையும் சுற்றுப்புறமும் சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.
சமையலறையில் பாத்திரம் துலக்க உதவும் ஸ்பாஞ்ச் அதிக அளவு கிருமிகள் இருக்கும் இடம். அதன் ஒரு சதுர இஞ்ச் பரப்பில் 134,000 பாக்டீரியாக்கள் இருக்கலாம் என சோதனை முடிவுகள் காட்டுகின்றன. அதன் ஈரப்பதம் கிருமிகள் பல்கி பெருகுவதற்கு ஏற்ற சூழ்லைக் கொடுக்கிறது.

வயிற்றோட்டட்டம் மற்றும் வயிற்று வலி உருவாக்கும் Salmonella , Campylobacter போன்ற கிருமிகள் அதில் இருக்கலாம்.

சமையலறை ஸ்பாஞ்சுகளை வாரம் ஒரு முறை மாற்றவும். அல்லது ப்ளீச் கலந்த நீரில் 15 நிமிடம் ஊற வைத்து கழுவி உபயோகப்படுத்தவும்.

சமையலறை பாத்திரங்கள் கழுவும் தொட்டி கிருமிகள் நிறைந்திருக்கும் மற்றொரு இடம். சமையலறை கழிவு நீர் குழாய்களில் ஒரு சதுர இஞ்ச் இடத்தில் சுமார் 500,000 பாக்டீரியாக்கள் சாதாரணமாக காணப்படுமாம்.
சோப்புக்கள் கிருமிகளை கொல்வதில்லை.பிளீச்சிங் பவுடர் கலந்த தண்ணீர் தான் கிருமிகள் ஒழிப்பதற்கு சிறந்தது.

சமயலறை மற்றும் பாத்ரூம்களில் உள்ள தண்ணீர் குழய்களின் கைப்பிடிகள், கதவுகள் கைப்பிடிகள் போன்றவற்றில் ஏராளமான் கிருமிகள் இருக்கக்கூடும். ஒரு சதுர இஞ்சில் 13,000 பாக்டீரியாக்களும் 6000 மற்ற கிருமிகளும் இருக்கலாம்.

சமையலறை கட்டிங் போர்டு ஏராளமான கிருமிகளின் உறைவிடம்.
கழிவறை பீங்கானில் சதுர இஞ்சுக்கு சராசரி 3.2 மில்லியன் பாக்டீரியாக்கள் இருக்கின்றன.

குளியல் தொட்டிகளில் நீர் வெளியேறும் பகுதியில் சதுர இஞ்சுக்கு 120,000 சராசரி பாக்டீரியாக்கள் இருக்கின்றன.

குளியலறை திரை சீலைகளில் Sphingomonas மற்றும் Methylobacterium போன்ற பாக்டீரியாக்கள் பெருமளவில் பதுங்கிஇருக்கின்றன.

வாஷிங் மெசினிலும் மிகப்பெருமளவு கிருமிகள் நிறைந்திருக்கிறது. கழுவிய துணிகளிலும் எளிதில் இக்கிருமிகள் தொற்றி விடுகின்றன.

வாக்குவம் கிளீனர்களின் புருஸ் களில் பெருமளவு பாக்டீரியாகாள் இருக்கின்றன, அதில் 50% fecal bacteria மற்றும் 13% e-coli bacteria காணப்படுகின்றன.சுத்தமான இடத்தை முதலிலும் அசுத்தமான இடத்தை கடைசியிலும் சுத்தம் செய்வது மூலம் கிருமிகள் எல்லா இடமும் பரவாது தடுக்கலாம். வாக்குவம் கிளீனர் உபயோகப்படுத்திய பின் கைகளை சுத்தமாக கழுவிக்கொள்வது அவசியம்.

மிதியடிகளை சுத்தமாக வைத்திருக்கவும்.

படுக்கைகள், படுக்கை விரிப்புகள் ,போர்வைகள் ,தலையணைகள் பல்வேறு வகை கிருமிகள் மற்றும் நுண்ணிய பூச்சிகளின் உறைவிடம் .எப்போதும் சுத்தமாக வைத்திருக்கவும். இல்லையேல் பலவிதமான அலர்ஜிகளை இக்கிருமிகள் ஏற்படுத்தக்கூடும். இந்த துணிகளை கழுவிய பின் பூச்சிகள் சாகும் வரை கொதிநீரில் போட்டு, பின் உலர்த்தி உபயோகிக்கவும்.
குளிர் பதன பெட்டியில் கெட்டுப்போன, நாள்பட்ட எதையும் வைக்காதீர்கள்.
லாட்ஜுகளில் உள்ள போர்வைகள், ரிமோட் கண்ட்ரோல்களில் ஆபத்தான கிருமிகள் காணப்படலாம்.

பொது தொலை பேசி கிருமிகளின் சந்தை.

உதடுகளை அடிக்கடி நாக்கால் நக்கி ஈரப்படுத்தும் பழக்கம் நல்லதல்ல. உதடுகளின் வெளிப்புறம் நிறைய கிருமிகள் இருக்கலாம்.

நாற்றமான சூழல் பாக்டீரியாக்களின் தேசம். அங்கே அதிக நேரம் நிற்க வேண்டாம்.

சாலையோர உணவு விடுதிகளில் உணவு உண்பதை தவிர்க்கவும்.
டின்களில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள் அதன் விளிம்புகளில் நம் உதடு படும் இடங்கள் கிருமிகள் இருக்கக்கூடும்.மூடியுள்ள பாட்டில்கள் நல்லது.
காலணிகளை வீட்டின் வெளியே கழற்றியிடவும்.

பாத்ரூம் காலணிகளில் கிருமிகள் அதிகம் இருக்கும். சுத்தமாக வைத்திருக்கவும்.
வீட்டில் எல்லா இடமும் ஈரப்பதமின்றியும் சூரிய வெளிச்சம் படும்படியும் பார்த்துக்கொள்வோம்.
கைகள் நோய் கிருமிகளின் வளர்ப்புப் பண்ணை. எனவே நோயாளிகள் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஜலதோசத்துடன் கூடிய காய்ச்சல் இருந்தால் அடிக்கடி கையை கழுவுதல் நல்லது. நோய்த்தொற்றை குறைக்கும்.
பிறருடன் கைகுலுக்கும் போது ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கவும். பிறரது கைகள் எந்த அளவு சுத்தமானவை என்பது தெரியாது. சும்மா விஷ் பண்ணுதே நல்லது.
உணவு உண்ணும் முன்பும் பிறகும் கைகளை சுத்தமாக கழுவுவது மிக முக்கியம்.
ரிமோட் கண்ட்ரோல்கள், மொபைல் ஃபோன்கள், டெலிஃபோன் பட்டன்கள் , ஃபிரிட்ஜ் கதவு கைப்பிடி , கம்ப்யூட்டர் கீ போர்டு, மவுஸ், கதவு குமிழ்கள், சுவிட்சுகள், ரூபாய் நோட்டுகள், பேருந்துகளில் கைப் பிடிகள். பேனாக்கள், விசிட்டிங் கார்டுகள், மருத்துவமனை வராண்டாக்கள் , கைப்பிடிச்சுவர்கள், புத்தகங்கள் இவை யாவும் நோய்கிருமிகள் சர்வ சாதாரணமாக புழங்கும் இடங்கள். ஜாக்கிரதையாக இருங்கள்.
ரூபாய் நோட்டுகளை எச்சில் தொட்டு எண்ணாதீர்கள்.
பேருந்துகள், சினிமா தியேட்டர்கள், மருத்துவமனைகள் எங்கும் நோய்கிருமிகள் நிறைந்திருக்கும்.
தினமும் குளிப்பது மிக நல்ல பழக்கம்.இது தினமும் உடலில் தங்கும் கிருமிகளை நீக்குகிறது.
டால்கம் பவுடர் போடுவது தோலில் கிருமிகள் வளர்வதை தடுக்கிறது.
அழுக்கான ஆடைகளை உடுக்காதீர்கள்.
தண்ணீர் தேங்க விடாமல் நோய் பரப்பும் கொசுக்கள் பெருகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
தூங்கும் போது கொசு வலைகள் உப்யோகித்து கொசுவால் பரவும் டெங்கு, மலேரியா,போன்ற வைரசுகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்
வைரஸ் அதிகமாக புழங்கக்கூடும் என கருதும் மேற்கண்ட இடங்களை சோப்பு மற்றும் டெட்டால் போன்ற மருந்துகள் கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்துவது நல்லது.
வீட்டில் சேரும் கழிவுப் பொருட்களையும் குப்பைகளையும் நாள் தோறும் அப்புறப்படுத்த வேண்டும்.
இதெல்லாம் நீங்கள் உசாராய் இருக்க வேண்டி சொன்னது தான். பயந்து கவச உடை போடுமளவுக்கு போக வேண்டாம். முடிந்த அளவு விழிப்பாக இருப்போம். அதையும் மீறி இந்த கண்ணுக்கு தெரியாத வில்லன்கள் தாக்காமல் இயற்கை நமக்கு தந்த கவசமான நோய் எதிர்ப்பு சக்தியையும் சத்தான உணவுகள் உண்பதன் மூலம் வளர்த்துக் கொள்வோம்.

Post a Comment

0 Comments