கல்லீரல், மண்ணீரல் கோளாறுகள் தீர்க்கும் மூலிகைகள் !

90s கிட்ஸ்க்கு இது நிச்சயமாக தெரியும். பள்ளி விடுமுறை நாட்களில் கருப்பாக பழுத்து விழும் பழத்தை எடுத்து சாப்பிட்டால், அது சற்று கார்ப்புச்சுவை கலந்து இனிப்பாக இருக்கும். அதை அதிகம் சாப்பிட்டால் காது கேட்காது என பாட்டி எச்சரிக்கை செய்வார்கள். ஆனால் அப்பொழுது நூணா வின் பலன்கள் தெரியவில்லை. அங்கங்கு காணப்படும் நூணா மரத்தின் பயன்கள் இத்தனையா எனும்போது வியப்பளிக்கின்றது.


நுணா.
1. மூலிகையின் பெயர் -: நுணா.

2. தாவரப்பெயர் -MORINDA TINCTORIA.
3. தாவரக்குடும்பம் -: RUBIACEAE.
4. வேறு பெயர்கள் -: மஞ்சணத்தி, மஞ்சள் நீராட்டி என்பன.
5. இன வேறுபாடு -: வெண்நுணா. (நோனி)MORINDA CHITRIPOLIA
6.பயன்தரும் பாகங்கள் -: துளிர்,இலை, பழுப்பு, காய், பழம், பட்டை, வேர் ஆகியவை மரத்துவப் பயனுடையது.
7. வளரியல்பு -: எல்லா வித நிலங்களிலும் வளர்க்கூடிய சிறுமரம். தமிழகமெங்கும் வளர்கிறது.மா இலை போன்றும், இதிரடுக்கில் அமைந்த இலைகளையும், நாற்கோண சிறு கிளைகளையும் சிறிய வெண்னிற மலர்களையும் முடிச்சு முடிச்சாக்காய்களையும் கருப்பு நிறப் பழங்களையும்உடைய மரம். சுமார் 15 அடி உயரம் வரை வளரும். மரத்தின் உடபுறம் மஞ்சள் வண்ணமாயிருக்கும். அதனால் மஞ்சணத்தி என்றழைக்கப்பட்டது. பட்டைகள் தடிப்பாக இருக்கும். விதைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

kaleerla man eeral


8. மருத்துவப் பயன்கள் -: வெப்பம் தணிக்கும். வீக்கம் கரைக்கும், மாந்தம், கல்லீரல், மண்ணீரல் கோளாறுகளைத் தீர்க்கும். பசியைத் தூண்டும். தோல் நோய்களைக் குணமாக்கும். துணிகளுக்கு நிறமூட்டும்.

பட்டை கரப்பனொடு பாரச்சி லேஷ்மசுரமொட்டிநின்ற புண்கிரந்தி யோட்டுங்காண்-மட்டலரையெந்து நுணாவி ளிலைமாந்தத் தீர்த்துநல்லகாந்திதரு மேகமடுங் காண்.

நுணாப் பட்டையானது கரப்பான்,கபசுரம் புண், கிரந்தி இவற்றையும், இலையானது மந்தம் மேகம் இவற்றையும் விலக்கும். ஒளியைத் தரும் என்க.

முறை -: இதன் இலை நடுவிலிறுக்கின்ற ஈர்க்குகளை எடுத்து அதனுடன் துளசி, கரிசிலாங்கண்ணி, மிளகு, சுக்கு முதலியவற்றைச் சேர்த்துக் கியாழமிட்டு வடித்துக் குழந்தைகளின் வயது கேற்றபடி கால் அரை சங்கு அளவாக விட்டுக் கொண்டு வர மாந்த பேதி நிற்கும். இதன் இலையை அரைத்துப் புண் சிரங்கு, ரணம் இவற்றிற்கு வைத்துக் கட்ட ஆறும். இதன் இலையை இடுத்துப் பிழிந்து எடுத்துச் சாற்றை இடுப்பு வலிக்குப் பூச நீங்கும்.

பூதகரப்பான் பட்டை, பூவரசம் பட்டை, இசைப்பைக் கட்டி இவற்றை சமனெடையாகச் சுட்டுக் கரியாக்கி நல்லெண்ணையில் குழைத்துக் கரப்பான் மேற்றடவ நீங்கும். நுணாக் காய்களை ஒரு வீசை அளவிற்றுச் சேகரித்துச் சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் 10 பலம் சோற்றுப்புக் கூட்டி ஒரு மட்பாண்டத்தில் போட்டு அடுபிலேற்றிச் சிறு தீயாக எரித்து வருக்கவும், காய்கள் கரியான சமயம் கீழே இறக்கி ஆற வைத்து அரைத்துச் சீசாவில் பத்திரப் படுத்துக. இதனைக் கொண்டு தந்த சுத்தி செய்து வரப் பல்லரணை, பல்லாட்டம், ஈறுகளில் இரத்தம் சீழ் சொரிதல், பல் கூச்சம் முதலியன குணமாகும்.

நுணா இலைச்சாறு ஒரு பங்கும், உந்தாமணி, நொச்சி, பொடுதலை ஆகிய மூன்றின் சாறும் ஒருபங்கு கலந்து 3,4 வேளை கொடுத்து வரச் சகல மாந்தமும் தீரும்.

ஆறு மாதகுழந்தைக்கு -------------------- 50 சொட்டுக்கள்
ஒரு வயது முதல் இரண்டு வயது வரை 15 மி.லி.
மூன்று வயதிற்றகு மேல் ------------------ 30 மி.லி.
வெகு எளிதாகச் செரிக்கக் கூடிய உணவு கொடுக்க வேண்டும்.

நுணாத்தளிர், இலை, பழுப்பு சமன் சேர்த்து 35 கிராம் காட்டுச் சீரகத்துடன் ஒரு தேங்காய அளவு அரைத்து, ஒரு லிட்டர் நல்லெண்ணையில் மெழுகு பதமுறக் காய்ச்சி எண்ணெயைப் பிரித்து பக்குவப் படுத்தவும். கல்கத்தை சுண்டையளவு காலை, மாலை பாலுடன் கலந்து கொடுக்க வயிற்றுக் கோளாறு தீரும். எண்ணெயை வெண்மேகத்தில் தடவ 6-18 மாதங்களில் குணமாகும்.

நுணாக்காயையும், உப்பையும் சமன் அரைத்து அடை தட்டி உலர வைத்துப் புடமிட்டு அரைத்துப் பற்பொடியாக நாளும் பல் துலக்கி வந்தால் பற்கள் தூய்மையாகும் , பல் வலி,பல்லரணை, வீக்கம், குரிதிக் கசிவு ஆகிய நோய்கள் தீரும். சிறந்த பற்பொடியாகும்.

நுணா வேரையையும், காஷாயமிட்டுக் குடிக்கச் சுகப்பேதியாகும். கெடுதலில்லாமல் மலர்ச்சிக்கல் தீரும்.

ஒரு கிலோ நுணாப் பட்டையை இடித்து நான்கு படி நீரில் போட்டு அரைப்படியாகச் சுண்டக் காய்ச்சவும். இத்துடன் அரைப்படி எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும். இந்தக் கலவையில் ஒரு லிட்டர் எள் நெய் சேர்த்துச் சுண்டக் காயச்சி வடித்து வைக்கவும். இந்தத் தைலத்தை வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பூசி, தலைக்கும் தேய்த்து அரைமணி நேரம் சென்று குளித்து வரவும். உடலில் தோன்றும் கழலைக் கட்டிகள், அரையாப்பு கட்டிகள் மேகப்புண் ஆகியன குணமாகும். முறைசுரம், பித்தகுன்மம், படை நோய்களும் குணமாகும்.

நுணாப் பட்டையக் கொதி நீரில் போட்டு ஊறவைத்தால் சாயம் இறங்கிவிடும். வெண்மையான துணிகளுக்குக்கு காவி நிறம் ஊட்டலாம். இந்த காவி ஆடை உள் நோயைத் தீர்க்கும்.

வெண்நுணாவிலிருந்து குளிர் பானம் தயார் செய்து வெளிநாட்டிற்கு அனுப்புகிறார்கள். இதை சென்னையில் ஒரு நிறுவனம் செய்து வருகிறது. இந்தப்பானம் (நோனி) மருத்துவ குணம் வாய்ந்தது.

கிராம ப் புறங்களில் சாதாரணமாக நிறைய காணப்படும் இந்த மரம் தற்பொழுது காண கிடைப்பது அரிதாகவே இருக்கின்றது. அங்கங்கே பரவலாகவே தென்படுகிறது. அற்புதமான மருத்துவ மூலிகை குணம் கொண்ட இந்த மரத்தை அழியாமல் பாதுகாப்பதும் நம் கடமையாகின்றது.

குறிப்பு: இதைச் செய்வதற்கு முன்பு நல்ல நாட்டு மருத்துவர் (சித்த வைத்தியம்) ஒருவரை கலந்தாலோசித்து அதன் பிறகு இந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தவும்.

Post a Comment

0 Comments