தொழுநோய் குஷ்டரோகம் குணமாக சித்த மருத்துவம் !

அன்பு, அமைதி, கருணை, சமத்துவம், சகோதரத்துவம் என்று வார்த்தை அளவில் தான் உலகில் உள்ள அனைவரும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே தவிர, நடைமுறை வாழ்க்கையில் அதை யாரும் கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை. “பேச்சு பெரிதுதான், ஆனால் செயல் அதைவிட மிகப் பெரியது” என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

எய்ட்ஸ் நோயாளிகளைக் கூட இல்லத்தில் வைத்து பராமரித்து வரும் அளவிற்கு விழிப்புணர்வும், சகிப்புத் தன்மையும், மன பக்குவமும் பெற்று விட்ட மக்கள், ஆனால், தொழு நோய்க்கு உள்ளானவர்களை தீண்டத்தகாதவர்களாகக் கருதி, வீட்டை விட்டு வெறுத்து ஒதுக்கி, தனிமைப் படுத்தி அவர்கள் மனதில் ஆறாத ரணத்தை, தனி மனிதனும், இச் சமூகமும் ஏற்படுத்தி வருவதை நினைக்கும் போது நெஞ்சம் கனக்கிறது.


நமது இந்தியாவைப் பொருத்தவரை மத்திய, மாநில அரசுகள்தொழுநோயாளிகளுக்கென்று இலவச வீட்டுமனைகளையும், மருந்து, மாத்திரைகளையும், தொழு நோயாளிகளுக்கான இல்லங்களையும் அமைத்து கொடுத்து இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஒரு சில தொண்டு நிறுவனங்கள் தொழு நோயாளிகளின் விசியத்தில் ஓரளவு அக்கறையோடு செயல்பட்டு வருவது ஆறுதலை அளிக்கிறது என்றாலும், வெகு ஜன மக்களின் மனதில் தொழுநோய் பற்றிய அச்சமும், அருவெறுப்பும் இன்று வரை இருந்து கொண்டுதான் இருக்கிறது. மக்களின் பார்வையில் சாபக் கேடாகவும், சமூகப் பிரச்சனையாகவும் உருவெடுத்து இருக்கின்ற தொழு நோயை உரிய முறையில் ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் சிகிச்சை மேற் கொண்டால் பூரணமாக குணம் பெறலாம்.

தொழுநோயை   “ஹேன்சன் ஸ்டிசீஸ்” என்று சொல்வதுண்டு. நார்வே நாட்டைச் சார்ந்த “ஹென்றி ஆர்மர் ஹேன்சன்ஸ்” என்பவர் தொழு நோய் பற்றி விரிவான ஆய்வு செய்து உலக புகழ் பெற்றதால், உலக விஞ்ஞானிகளால் பாராட்டப் பெற்றார். “ஹேன்சன்ஸ்” என்ற அவரது பெயரையே தொழுநோய்க்கு சூட்டி மகிழ்ந்தனர்.

நமது ஆயர்வேத மருத்துவத்தில் இதனை “குஷ்ட ரோகம்” என்று அழைக்கின்றோம்.  கிராமப்புற மக்கள் இதனை “பெரும் வியாதி” என்றே பெரும்பாலும் அழைக்கின்றனர். “குஷ்ட ரோகம்” கொஞ்சம், கொஞ்சமாகப் பல வருடங்களில் ஏற்படும் ஒரு நாள்பட்ட நோய் ஆகும். இது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பரவுவதில்லை. ஆனால், தொழு நோயாளிகளின் குழந்தைகளுக்கோ அல்லது தொழு நோயாளிகளோடு நீண்டகாலத்திற்கு நெருங்கி பழகுகிறவர்களுக்கோ அபூர்வமாக சில சமயங்களில் இந் நோய் உண்டாகுகிறது என்பதை நடைமுறையில் பார்க்க முடிகிறது.தேகத்தில் தொட்டுப் பார்த்தாலும், நகத்தினால் கீறினாலும், அல்லது சிறிய ஊசியால் குத்தினாலும் தோலில் உணர்ச்சி தெரியாது. சரீரத்தில் தடிப்புகள் உண்டாகும். அரிப்பும், புண்ணும் ஏற்படும். சரீரத்தில் நிற வேறுபாடுகள் ஏற்படும்.

உடம்பில் நெருப்புச் சுட்டதைப் போல புண்ணாகும். கருநிறமடையும், மயிர் கூச்சலுண்டாகும். உடம்பில் வியர்வை வற்றும், ஒரு சிலருக்கு வியர்வை வெளிப்பட்டாலும் வெகு சீக்கிரம் உலர்ந்து போகும். தேகத்தில் கிரிமிகள் உண்டாகும். மயிர், தோல், எலும்பு, நரம்பு முதலானவைகளை இந் நோய் தின்னும். இதனால் சரீர உறுப்புகள் குறைவடையும். இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் மகா குஷ்ட நோய் என்று தெரிந்து கொள்ளலாம்.

அறியாமையின் காரணமாக ஒன்றுக் கொன்று ஒத்துக் கொள்ளாத, விரோதமான ஆகாரங்களை ஒன்றுச் சேர்த்து உண்பதாலும், சாப்பிடக் கூடாதவைகளை சாப்பிடுவதாலும், நோயுள்ள விலைமாதர்களிடம் உடலுறவு கொள்வதாலும், பொறுமையே உருவாகக் கொண்ட உத்தமர்களை நிந்தனை செய்வதாலும், அன்னியொன்யமாக இருக்கும் இரு மனம் ஒத்த ஸ்நேகிதர்களை வஞ்சமாக பிரிப்பதாலும், பூர்வவினைகளின் விளைவாகவும், கற்புள்ள மாதர்களை களங்கப்படுத்தி இச்சிப்பதாலும், “குஷ்ட ரோகம்” உருவாகிறது என்று நமது ஆயுர்வேத மருத்துவம் கூறுகின்றது.

குஷ்ட ரோகத்தை 18 வகைகளாக நமது முன்னோர்கள் பிரித்து உள்ளனர். 1. புண்டரீக குஷ்டம் 2. விஸ்பேராட குஷ்டம், 3. பரம குஷ்டம், 4. கேச் சர்ம குஷ்டம், 5. கரண குஷ்டம், 6. சிகுர குஷ்டம், 7. கிருஷ்ண குஷ்டம், 8. அவுதும்பர குஷ்டம், 9. மண்டல குஷ்டம், 10. அபரபாச குஷ்டம், 11. விர்ச்சிகா குஷ்டம், 12. வையாதி குஷ்டம், 13. கிடிப குஷ்டம், 14. தத்ரு குஷ்டம், 15. சர்தேவ குஷ்டம், 16. ஸித்ம குஷ்டம், 17. சாதாரூ குஷ்டம், 18. சுவேத குஷ்டம்.

தாமரையின் பூவிதழ்போல் குவிந்து கறுப்பு, வெளுப்பு, சிவப்பு இவைகளுடன் கூடி சர்மத்தில் இரணம் உண்டாகும். அரிப்பு இருக்கும், சொரிந்தால் சுனைநீர் போல் துர்நீர் கசியும். சரீரம், காது, முகம் இவைகளில் வேதனை உண்டாகும் இதைதான் “புண்டரீக குஷ்டம்”, என்றும், சரீரத்தில் அரிப்பு ஏற்பட்டு, சருமத்தில் வெடிப்புகள் ஏற்படும்.

நெருப்பு சுட்டதைப் போல் எரிச்சலைக் கொடுக்கும். சில இடங்களில் நல்ல பாம்பின் படம் போல் தடித்து வெண்மையாகும். சிவப்பு நிறமான துர்நீர் கசியும், தோல் தடிக்கும், தூக்கமும், அதிகமான வேதனையும் தரும் இதை “விஸ்பேராட குஷ்டம்” என்றும்,

அரிப்பு உண்டாகிச் சருமம் வெளுப்பாகும். சீழ்வடியும், தேகம் குன்றும், சரீரத்தில் எரிச்சல் எடுக்கும். தாமரைக் குடைப் போன்று மேலே எழும்பிச் சொறி உண்டாகும். பாம்பின் தோலைப் போன்று வீங்கும். கால், கைகள் குறைவடையும். இதை “பரம குஷ்டம்”    என்றும்,

தோல் கறுநிறமாகி உரியும், தோல் உரிந்த இடம்  சிவப்பாகும். பின்னர் “சொர, சொர” என்று அந்த இடம் இருக்கும். நாளடைவில் வெடிப்புகள் உண்டாகும், அரிப்பு ஏற்படும். கால், கை விரல்கள் கடினமாகி எரிச்சலைத் தரும், தேகத்தில் வலியும் ஏற்படும் இதை “கேச் சர்ம குஷ்டம்” என்றும்,

சர்மம் வெடிக்கும், உடல் வேதனை அதிகமாகும். தேகம் வீங்கி, மதமதப்பு உண்டாகும். மர்ம ஸ்தானம் வெண்ணிறத்தையோ, நீலநிறத்தையோ அடையும். வீக்கம் ஏற்பட்டு மனக் கவலை அதிகரிக்கும் இதை “கரண குஷ்டம்”என்றும்,

உடல் பொதுவாக வெண்ணிறத்தையோ (அல்லது) பசுமை நிறத்தையோ அடையும். சிவப்பும், கறுப்புமான தடிப்புகள் உண்டாகித் தாங்க முடியாத அரிப்பு உண்டாகும். தடிப்புகளிலிருந்து சில சமயம் சீழ் வரும். தசை, வயிறு, பின்புறம் முதலான பகுதிகளில் நமைச்சல் உண்டாகும். தேகத்தில் மதமதப்பு தோன்றும். தசைக்குள் எரிச்சல் ஏற்படும், வயிற்றுக்கு அடியில் தடிப்பு உண்டாகும் இதை “சிகுர குஷ்டம்”என்றும்,
 தேகம் கறுத்துப் போகும், சிவந்த தடிப்புகள் உண்டாகி தொட்டால் உணர்வு இருக்காது.

மதமதப்பு உண்டாகும், நாற்றம் எடுக்கும். உஷ்ணம் தாக்கும், உடம்பில் வலி எடுக்கும். புறங்கால், தலை முதலான இடங்களில் வலி அதிகம் இருக்கும். இதை “கிருஷ்ண குஷ்டம்”என்றும்,

தேகத்தில் அத்திக்காயைப் போன்று கறணைகள் உண்டாகும். நாளடைவில் அது பெருக்கும். உடம்பில் தோல் கறணையின் பாரம் தாங்காமல் வளைந்து தொங்கும். மதமதப்பு ஏற்படும், அரிப்பு உண்டாகும், சொறிந்தால் செந்நிறமான துர்நீர் கசியும். மயக்கம் ஏற்படும் இதை “அவதும்பர குஷ்டம்” என்றும்,

உடம்பு, தலை முதலான இடங்களில் பச்சை நிறமாகவும், சிகப்பு நிறமாகவும் தடிப்புகள் ஏற்படும். சில இடங்களில் தேகத்தில் கறுநிறமான படைகளும் ஏற்பட்டு அரிப்பு உண்டாகும். சொறிந்தால் சிவப்பு நிறமான நிணைநீர் வெளிவரும் இதை “மண்டல குஷ்டம்”என்றும்,

தேகத்தில் தாங்க முடியாத வலி உண்டாக்கி, இரத்தம் கருநிறமடையும். மனக் கவலை அதிகரிக்கும். தேகத்தில் வாயு அதிகரிக்கும். வீக்கத்துடன் உடலில் வெடிப்புகள் ஏற்படும் இதை “அபரபாச குஷ்டம்” என்றும்,

வாத, பித்தக் கோளாறினால் உடலில் வெண்மை நிறமான தடிப்புகள் ஏற்படும். தொட்டால் “வழ, வழ” என்று எண்ணெய் தடவியதைப் போலாகும், எரிச்சல், அரிப்பு முதலானவைகளும் உண்டாகும். சில இடங்களில் செந்நிறமாகத் தடிக்கும். நாவறட்சியுண்டாகும். வயிறு உப்புசம், எரிச்சல், சலசலப்பு முதலான குறிகளும் உண்டாகும் இதை “விர்ச்சிகா குஷ்டம்” என்றும்,

கப, பித்தங்கள் அதிகரித்து உடம்பில் வெடிப்புகளை உண்டாகும். தாங்க முடியாத வலி, அழற்சி முதலியவைகளை உண்டாக்கும். மேலும், கண், காது, தொண்டை, விரை முதலான இடங்களில் புண்கள் உண்டாகும். பாம்பின் உடலைப்போன்று காணப்படும். கை, கால் சந்துகள் கறுநிறமடையும் இதை “வையாதி குஷ்டம்” என்றும்,

சரீரம் பசுமை நிறமடைந்து யானைத் தோலைப் போன்று தோல் கடினமாகும். அரிப்பு அதிகரிக்கும், அடிக்கடி மூத்திரம் இறங்கும். உடல் நாறும், வீக்கம் உண்டாகும். இதை “கிடிபா குஷ்டம்” என்றும்,தேகத்தில் சிவப்பு நிறமாகவும், வட்டமாகவும் பல்வேறு தழும்புகள் ஏற்படும். உடல் வெளுக்கும், வலி ஏற்படும்.

மயிர் சுருண்டு போய் உருண்டையாகச் சடையாகும்.  பித்தம், கபம் அதிகரிக்கும் இதை “தத்ரு குஷ்டம்” என்றும்,
உடம்பு வலி உண்டாகும். தேகத்தில் கீற்றுக் கீற்றாக வெடிப்புகள் உண்டாகி வலியைத் தரும். தொட்டால் அதிக வேதனையைக் கொடுக்கும். சிவப்பு நிறமாகும். அசதி, மயக்கம், வயிற்றுவலி இவைகள் உண்டாகும் இதை “சர்தேவ குஷ்டம்” என்றும்,

வாத, பித்தம் அதிகரித்து தேகத்தில் சுரைப் பூவைப் போன்ற நிறமுள்ள தடிப்புகள் ஏற்பட்டு, மதமதப்புடன் வட்டமாக ஆகும். சிவப்பு நிறமான நீர் கசிவு உண்டாகும். தேகத்தை அசைக்க முடியாது, ஞாபக மறதி அதிகமாகும் இதை “ஸித்ம குஷ்டம்” என்றும்,ரத்த நிறமான தடிப்புகளும், செழும் பச்சை, வெள்ளை இவைகளோடு கூடிய தடிப்புகளும் இருக்கும். எரிச்சலும் அரிப்பும் அதிகரிக்கும். கபமும், வாதமும் அதிகரித்துக் கரடுகட்டிப் புண்ணாகும். பாம்பின் தோலைப் போன்று தடிக்கும். மூக்கு, காது, கன்னம் முதலான இடங்களில் தடிப்பு காணபப்படும். இதை “சாதாரூ குஷ்டம்” என்றும்,

உடல் முழுவதும் வெளுத்துப் போகும். உள்ளங்கை, குதம், குய்யம் முதலான இடங்கள் நெருப்புச் சுட்டதைப் போல் எரியும், சிவந்துப் போகும், உடலில் வீக்கம் உண்டாகும். இதை “சுவேத குஷ்டம்”என்றும், ஆயுர்வேத மருத்துவம் கூறுகின்றது.தொழுநோயை ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும். தொடர்ந்து மருத்துவரின் ஆலோசனையோடு மருந்தும், முறையான ஆகாரங்களையும் உண்ண வேண்டும். தொழு நோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டவுடன் வெறுத்து ஒதுக்காமல், அன்போடும், அக்கறையோடும் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.

தொழுநோயளிகளின் கை, கால்கள் உணர்ச்சியற்றுப் போய் விடுவதால் வெட்டு காயங்கள், சிராய்ப்புகள், கொப்பளங்கள், தீக்காயங்கள் போன்ற ஆபத்துகள் அடிக்கடி ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே வெறுங் காலோடு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கூர்மையான கற்களும், முள்களும் உள்ள இடங்களுக்கு செல்லும் போது செருப்பு அல்லது “பூட்ஸ்”அணிந்து கொள்ள வேண்டும்.

வேலை செய்யும் போது கூர்மையான ஆயுதங்கள், நெருப்பு மற்றும் சூடான பொருட்களை பயன்படுத்திச் செய்ய வேண்டிய வேலைகளை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக புகைப்பிடிக்க கூடாது. சமைக்கும் போது கையுறை அல்லது துணியைக் கைகளில் அணிந்து கொள்ள வேண்டும். சூடாக இருக்க கூடிய  பாத்திரங்களை வெறுங்கையோடு எடுக்கக் கூடாது.

தொழுநோயாளிகள் ஒவ்வொரு நாளும் தங்கள் கை, கால்களில் வெட்டுக்காயம், சிராய்ப்பு, தீக்காயம், அல்லது முள்கள் இருக்கிறதா என்று கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் அல்லது வேறு ஒரு நபரைப் பார்க்க சொல்ல வேண்டும்.

கை, கால்களில் சிவந்த சூடான வீக்கங்கள் அல்லது கொப்புளங்கள் தென்பட்டால், அந்த இடத்தில் தோல் சாதாரண நிலைக்கு வரும் வரை சுத்தமாகவும், ஓய்வாகவும் வைத்திருக்க வேண்டும். திறந்த புண் ஏற்கனவே இருந்தால் அல்லது ஏற்பட்டுக் கொண்டிருந்தால் ஆட்டாமல் அசைக்காமல் வைத்திருக்க வேண்டும்.

மீண்டும் அந்த பகுதியில் காயம் ஏற்படாமல் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெரும்பாலும், தொழுநோயாளிகளிடம் காணப்படும் திறந்த பெரிய புண்களும், கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து போகும். கைகளும், கால்களும் நோயினால் ஏற்படுவதில்லை. தன்னை சரியாகப் பாதுகாத்து கொள்ளாதக் காரணத்தால் தான் ஏற்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


தொழுநோய்க்கான ஆயுர்வேத மருந்துகள்


பிரமி இலைச்சாறு – 4படி
பசுவின் நெய்  – 4படி
கடுக்காய் தோல்
நெல்லிக்காய் வற்றல்
தான்றிக்காய் தோல்
சிறு நாகப்பூ
இந்துப்பு
சுக்கு
மிளகு
திப்பிலி

இவற்றை வகைக்கு 70 கிராம் எடுத்து, நன்றாகப் பொடித்து மேற் சொன்ன பிரமி இலைச்சாறு, பசுவின் நெய் ஆகியவற்றோடு ஒன்றாக கலந்து, அடுப்பின் மீதேற்றி லேசான தீயில் எரித்து, பதத்தில் இறக்கி பத்திரப்படுத்;திக் கொண்டு, தினந்தோறும் காலை, மாலை நெல்லிக்காய் அளவு உட்கொண்டால் 18 விதமான குஷ்டரோகமும் தீரும்.

நெல்லிக்காய் கெந்தகம்- 35 கிராம் எடுத்து, வேப்பெண்ணைய் விட்டு நன்றாக அரைத்து, அதனுடன் வெற்றிலைச்சாறு 3 படி விட்டுக் குழப்பி வெய்யிலில் வைக்கவும். இறுகிய பின் அதனுடன் தேன், நெய் இவைகளை விட்டு காலை, மாலை 5 குன்றி மணி அளவு 40 நாட்கள் உட்கொண்டால் குஷ்டரோகம் தீரும்.

ஆகாரத்திற்கு பிறகு பாலில் சாப்பிடவும்
ஆரோக்கிய வர்த்தினி வடி – காலை- 1 இரவு-1
மதுஸ்னுஹீ சூர்ண மாத்திரை- காலை-1 இரவு–1

சம அளவு தண்ணீரில் கலந்து சாப்பிடவும். கதிரா அரிஷ்டம்   : காலை- 15 மில்லி
இரவு – 15 மில்லி
ஆகாரத்திற்கு பிறகு பாலுடன் சாப்பிடவும். மஹாதிக்தக க்ருதம் : காலை- 15 கிராம்
இரவு – 15 கிராம்
மாணிபத்ர லேஹ்யம் :      

10 கிராம் சூடான தண்ணீருடன் இரவு படுக்கும் முன் சாப்பிடவும்.
பத்தியம்:  உப்பு, புளி, மிளகாய் மற்றும் மாமிச உணவுகளை தவிர்க்கவும். 80 நாட்களுக்கு பால்சாதம் அல்லது வெந்நீர் சாதம் சாப்பிடவும்.

குறிப்பு:            மேற்சொன்ன மருந்துகளைத் தவிர, இன்னும் ஏராளமான மருந்துகள் ஆயுர்வேத மருத்துவத்தில் இருக்கின்றன. எனவே, ஆயுர்வேத மருத்துவரை அணுகி ஆலோசனையும், சிகிச்சையும் பெற்றால் பூரணமாக சுகம் பெறலாம்.

Post a Comment

0 Comments